Friday, May 11, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 6

குடுமியான்மலை. புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது.  சங்காலத்தில் வழங்கப்பட்ட ஒல்லையூர் என்ற ஊரின் பெயரிலேயே பிந்தைய கல்வெட்டுகளிலும் ஒல்லையூர் கூற்றத்து குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம்  என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கே புகழ்பெற்ற இசைக்கல்வெட்டும் பிரசித்தி பெற்ற குடைவரைக்கோவிலும் பாண்டியர் கால கோயில் கட்டுமானமும் நாயக்கர் கால சிற்பங்களும் நிறைந்துள்ளன. மேலதிக தகவல்களை பின்னொரு பகுதியில் விரிவாக காண்போம். இக்குடுமியான்மலையின் கீழ்பகுதியில் குடபோக கோவிலின் வரலாறு சற்றொப்ப 1400 ஆண்டுகள் பழமையெனில் அம்மலையின் பின்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமையான (பொயுமு 3ம் நூற்றாண்டு) தமிழி எழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. அதன் சிறப்பையும், அவலத்தையும் இங்கே காண்போம்.

மலையின் பின்புறம் சென்றால் கீழ்பகுதியில்   மதுரை சமண பண்பாட்டு குழுவினரின் மஞ்சள் வண்ண பெயர்ப்பலகை காணப்படுகிறது. அவர்களின் அரும்பணி பாராட்டுக்குரியது, ஆனால் தமிழி எழுத்துக்கள் அனைத்தும் சமணர்க்கு மட்டுமே உரியது என்பது  எங்ஙனம் ஏற்புடையது? சரி அவ்விவாதத்திற்குள் நுழைய வேண்டாம். அப்பெயர் பலகையைக் கடந்து சற்று மேலேறினால் வலப்புறத்தில் சில கற்படுக்கைகளும் சற்று மங்கிய நிலையில் ஒரு தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. அக்கல்வெட்டின் விளக்கத்தை காண்போம்.
'நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்' என்பதே அதன் பாடமாக வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர்.  நாழள் என்பது சங்ககாலத்தில் குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர் வகைகளில் ஒன்று, இம்மலர் இன்று புலிநகக்கொன்றை, மயிற்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இம்மலரின் பெயரில் அமைக்கப்பட்ட ஊரே இங்கு குறிக்கப்படுகிறது,  அந்தை என்பது மரியாதைக்குரிய சொல், கொற்றந்தை என்பவர் இங்கு மரியாதைக்குரியவராக காட்டப்படுகிறார். 'நாழள் ஊரினை சார்ந்த கொற்றந்தை என்பவர் செய்த பள்ளி' என்பதே இவ்வாசகத்தின் விளக்கம்.
இன்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையான எழுத்துருவெனில் இதன் முக்கியத்துவத்தை சொல்லி உணரத்தேவையில்லை,   இம்மாதிரி கல்வெட்டுகளால் தானே நம்மொழி செம்மொழியாயிருக்கும்.  இன்று இதன் நிலையாதெனில் இக்கல்வெட்டை அடையாளம் காண்பதற்கே சிரமப்பட வேண்டியுள்ளது, இதுவே உண்மை எற்கின்ற யதார்த்த நிலை முகத்தில் அறைகிறது. 1991ம் வருடம் இக்கல்வெட்டை கண்டறிந்து இன்றுடன் 27 வருடம் ஆகிறது. ஒரு தலைமுறை இடைவெளியில் அடையாளம் காண சிரமபட்டுள்ளோம். அடுத்த தலைமுறையில் இருக்குமா என்பதே சந்தேகம். காரணம் இவ்விடம் இன்று மது அருந்தும் கூடாரமாகிவிட்டது.  இவ்வெழுத்து பொறிப்பு அருகேயே இயற்கை உபாயம் கழிக்கும் இடமாக மாறிவிட்டது.  மதுபான புட்டி குப்பை, மனிதக்கழிவுகளை அப்புறப்படுத்தியே அதை காணவேண்டியுள்ளது கொடுமை.


இந்நிலை என்று மாறுமோ?

0 comments:

Post a Comment