Sunday, April 22, 2018

புதுக்கோட்டைக்குடைவரைகள்-3

மாங்குடி



சிறிது காலம் முன்பு இணையதளம் வாயிலாக நம் நண்பர்கள் ஒன்றிணைந்து நல்லறம் ஆற்றிய வயலோகம் அருகேயுள்ளது இக்குடைவரை. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து வயலோகம் செல்லும் வழியில் மன்னைவேளார் பட்டிக்கு முன்பாக இடதுபுறம் வளைந்தால் சுமார் இரண்டு கி.மீ தொலைவிலே மாங்குடி என்னும் ஊர் உள்ளது. இங்கு சென்று குடைவரை கோவில்  என்று விசாரித்தால் உள்ளூர்வாசிகளே திணறுவர். பிள்ளையார் கோவில் என்றால்தான் வழி சொல்லுவர். அங்குள்ள சிறிய பாறைத்தொடர் ஒன்றிலே இந்த எளிய குடைவரை அமைந்துள்ளது. இக்குடைவரையானது மூன்று பாகமாய் அகழப்பட்டுள்ளது. முகப்பு, அகலம் குறைந்த முன்பண்டம், கருவறை என குடையப்பட்டுள்ளது. முகப்பு பகுதி அலங்காரம் ஏதுமின்றி வெட்டப்பட்டுள்ளது, கல்வெட்டுகளோ சிற்பங்களோ ஏதுமில்லை.
முகமண்டபமும் வடக்குச்சுவரும் முழுமையடையாமலும், தெற்குச்சுர் முழுமையடைந்தும் அழகுற வெட்டப்படாதும் உள்ளது. கருவறைவாயிலின் முன்பு படிகள் ஏதுமில்லை, உட்புறம் சதுரக்கோட்டமானது சிறிது ஆழமாய் வெட்டப்பட்டுள்ளது.  இதனுள் இலலிதாச இடம்புரி பிள்ளையார் செதுக்கப்பட்டு காட்சியளிக்கிறார். குடைவரையின் மற்ற பாகங்களை நோக்குகையில் இவர் காலத்தினால் சிறிதுபிற்பட்டவராகவே தோற்றமளிக்கிறார்.
பின்கையில் அங்குசமும், பாசமும், வலமுன்கையில் தந்தம் ஏந்தியும் அருளிக்கிறார். கரண்டமகுடமணிந்துள்ளார். உடைந்த அம்மன் சிலை ஒன்று குடைவரையின் இடப்புறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இக்குடவரையில் கல்வெட்டுகள், மற்றும் கட்டுமான உறுப்புகள் ஏதுமில்லாததால் இக்குடவரையின் காலத்தை கணிப்பது அரிது.
Reference :
 புதுக்கோட்டை குடைவரைகள்
(மு.நளினி, இரா.கலைக்கோவன்)

0 comments:

Post a Comment