பல்லவராயன்பேட்டை சாசனம் :
மாயவரத்திலிருந்து நீடூர் செல்லும் சாலையில் பல்லவராயன்பேட்டை எனும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முக்கியத்துவம் பெற்ற ஒரு கல்வெட்டு உள்ளது. இத்திருக்கோவில் இரண்டாம் ராஜராஜனின் பத்தாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி1155ல் திருச்சிற்றம்பலமுடையானான பெருமாள்நம்பி பல்லவரையன் என்பவரால் எழுப்பப்பெற்றது. (ARE 1924 inscription no 434 & 435)
இன்றுநாம் காணஇருக்கும் கல்வெட்டுச் சாசனம் பெருமாள்நம்பி பல்லவரையன் இறந்தபின் அவரது மனைவியருக்கு 40 வேலி நிலம் தந்த செய்தியைச் சொல்வதோடு அவ்வரையன் இரண்டாம் இராஜாதிராஜனை அரசானக்கியமை மற்றும் ஈழப்போரில் பங்கேற்றமை குறித்தும் தகவலளிக்கிறது. அவ்வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக கல்வெட்டு நிறைய சிதைந்திருப்பினும் இக்கல்வெட்டின் 10,11,12 ஆகிய வரிகள் சிதையாமல் இருந்து முக்கியதகவலளிக்கிறது!
அதனை காண்போம்
10.வேண்டிப்புறத்து எல்லா அடைவு கேடுகளும்
வ(ராத) இடத்தில் இந்....லும் பரிகரித்து
இவ்....பெரியதேவர் எழுந்தரு(ளி) நாளிலே
திரு(அபி)ஷேகத்துக்குரிய பிள்ளைகள் இன்றியே....(ருக்கி)
11.றபடியை பார்த்து முன்னால் இருந்தபடியே வி....(செ)ய்து கங்கை (கொ)ண்ட சோழபுர ....தளி
இருக்கின்ற பிள்ளைகளை....யாணம் பண்ணு உடையார் விக்ரமசோழதேவர் பேரனார்
12.நெறியுடையபெருமான் திருமகனார் எதிரிலிப்பெருமாளை பெரி.....(சி)அருளின நாளிலே மண்டகவிபித்து....தார் ஆனவாரே இவரை திரு(அபி)ஷேகம் பண்ணுவிக்க கடவராக(து)
நாலாந்திருநக்ஷத்திரத்திலே ராஜாதிராஜ தேவர் என்று
13.திருஅபிஷேகம் பண்ணுவித்து உடன் கூட்டமும் நாடும் ஒன்றுபட்டு செல்லும்படி பண்ணு(வித்)து அருளினார்...
இச்சாசனத்திலிருந்து தெரியவருபவை, இரண்டாம் ராஜராஜனின் பிள்ளைகள் ஒருவயதும், இருவயதுமாக இருந்தது,
அந்தபுர மகளிரையும் மக்களையும் ஆயிரத்தளியிலிருந்து இராஜராஜபுரம் கொணர்ந்தது,
நாட்டாலும் உடன்கூட்டத்தாலும் ஏற்ப்பட்ட கலகத்தை நீக்கியது
இராஜராஜதேவர் எழுந்தருளிவித்து எதிரிலிப்பெருமாள் என்பவனை தேர்ந்தெடுத்து இராஜாதிராஜன் பெயரிட்டு அரசனாக முடிசூட்டியது
இவ்வனைத்து காரியத்திலும் பெருமாள்நம்பி பல்லவரையன் பங்கேற்றமை போன்றவைகளை இச்சாசனம் சுட்டிகாட்டுகிறது.
இதில் வரும் முன்னாளில் இருந்தது போலவே என்ற வரி ஆய்ந்து காணவேண்டியது. இதனை அதிராஜேந்திரன் இறந்தபின் குலோத்துங்கன் அரசுரிமை ஏற்றது போன்ற ஒன்றென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதில் வரும் எதிரிலிப்பெருமாள் விக்கிரமசோழனின் பேரனாக குறிப்பிடப்படுகிறார். மகன்வழியா? மகள்வழியா? என தகவல் இல்லை.
இதுகுறித்தமேலும் ஒரு சுவையான விவாதத்தை அடுத்த பகுதியில் காண்போம்
0 comments:
Post a Comment