காலத்தின் ஓட்டத்தில் சிதைந்த சமணக் கற்றளி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிழக்கு பக்கம் மலையடிப்பட்டி செல்லும் வழியில், கண்ணங்குடி என்னும் பிரிவுசாலையில் சுமார் 10 கி.மீ சென்று, அங்கிருந்து செட்டிப்பட்டி என்று வழிகேட்டால் முதலில் காயாம்பட்டி என்ற ஊர்வரும், அங்கே ஓர் தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல்துறையால் பராமரிக்கப்பட்டுவருகிறது.
அவ்வூரிலிருந்து சுமார் 2. கி.மீ ஒற்றையடிப்பாதையில் பயணித்தால் இக்கோவில் வரும். இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடியும். வழிநெடுக கருவேலமுட்கள் சூழ்ந்திருக்கும்.
முதலாம் ராஜராஜசோழர் கால கல்வெட்டு உள்ளது என ASI குறிப்புள்ளது, நாங்கள் தேடியபோது கிடைக்கவில்லை. கல்வெட்டில் இக்கோவில் ஐந்நூற்றுவபெரும்பள்ளி என அழைக்கப்படுகிறது. ஊர்மக்களிடம் ஓட்டைக்கோவில் செல்லும்வழி என்று கேட்டால்தான் வழி சொல்லுவர்.இதிலுள்ள கோபுர அமைப்பு கொடும்பாளூர் மூவர் கோவிலை ஞாபகபடுத்துவதாக குறிப்புள்ளது.ஆகவே இக்கோவிலை பூதிவிக்ரமகேசரி கட்டியிருக்கலாம் என ASI கருதுகிறது.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதென அறிவிப்புப்பலகை மட்டும் உள்ளது. மற்றபடி சாலைவசதி, மற்றும் விரிவான அறிவிப்புபலகையை முக்கிய இடங்களில் வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இக்கோவிலின் எஞ்சிய முக்கிய பாகங்கள், தீர்த்தங்கரர் சிற்பங்கள் திருச்சி தொல்லியல்துறை அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.