Tuesday, March 27, 2018

மங்கைக்கோயில்கள் - 3


பசுமங்கை

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவிலே அய்யம்பேட்டைக்கு முன்னதாக உள்ளது பசுபதிகோயில். இவ்வூர் நெடுஞ்சாலையின் இடப்புறமாக உள்ளது கள்ளப்பசுபதி என்றழைக்கப்படும் பசுபதீஸ்வரர் கோயில். இக்கோயில் கோச்செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயிலாக கருதப்படுகிறது. மூன்று தளங்கள் கொண்ட கோபுர நிலையின் இருபுறமும் சிறிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்  மார்க்கண்டேயன் கதையுரைக்கும் சிற்பமானது எட்டு கைகளுடன் ஆயுதமேந்திய சிவனும் இடப்புறம் லிங்கமணைத்த மார்க்கண்டேயனும் வலப்புறம் ஒரு கையைத் தரையில் ஊன்றிய எமனுமாக அழகாய் காட்சி தருகிறது.
வலக்காலை லிங்கத்தின் மேல் வைத்துத் தன் கண்ணை குருடாக்கத் துணியும் கண்ணப்ப நாயனார் சிற்பமும், யானையொன்று லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே நின்று லிங்கத்திற்கு குடமுழுக்கு செய்ய அருகே முனிவர் வணங்கி நிற்கும் சிற்பமொன்றும், லிங்கத்தைச் சுற்றி வந்து அதற்குக் குடையாக நிற்கும் ஐந்து தலை நாக சிற்பமும், அருகே தேவியுடன் சுகாசனத்தில் காட்சியளிக்கும் சிவனும் சிறிய சிற்பங்களாக உள்ளன. இவை தவிர கோயிலின் மேற்குப் புற வெளிப் பிரகாரச் சுவரிலே கழைக்கூத்தர்கள் சிற்பமும் வீணைக் கலைஞர்கள் சிற்பமும் ஆடற் பெண்டிர் சிற்பமென சிறு சிறு சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலிறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பால்வளநாயகி. தெற்குப்புறம் தென்முகக் கடவுள் சிற்பமுள்ளது.  அம்மன் சன்னதி வலப்புறமுள்ளது. சற்று உயர்ந்து காணப்படும் இருதள மாடக்கோயிலில் படியேறி மேற்சென்றால் நேர்முகமாக பிள்ளையார் சன்னதியும் அதற்கு வலப்புறம் மூலவர் சன்னதியும் உள்ளது. சன்னதியில் கோட்ட சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. கோயிலின் தென்மேற்கே மாந்தன் மாந்தியுடன் கூடிய தவ்வைத்தாய் சிற்பமுள்ளது. வடமேற்கே பைரவர் சிற்பமுள்ளது. சப்த மங்கைகளில் வராகி வழிபட்ட தலமிது.


தாழமங்கை

சப்த மங்கைக்கோயில்களில் ஆறாவது தாழமங்கை ஆகும். இக்கோயிலானது தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. சப்த மங்கைகளில் இந்திராணி வழிபட்ட தலமாக நம்பப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்திரமௌலீஸ்வரர். இறைவி இராஜராஜேஸ்வரி.

செந்தலைத் தூண் கல்வெட்டில் காணப்படும் நித்தவினோதவளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்கலமே காலப்போக்கில் மருவி இன்று தாழமங்கை எனப்படுவதாக செல்வராஜ் ஐயா எடுத்துரைக்கிறார்.

0 comments:

Post a Comment