Thursday, August 9, 2018

அறியப்படாத கோயில்கள் - 4


சிற்றறையூர் என்னும் சித்தூர்
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓர் சிற்றூரே இன்று நாம் காண இருக்கும் கோவிலாகும். இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கோவில் இது. தற்சமயம் சுற்றுசுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. கோவில் பூட்டி இருப்பினும் அருகிலுள்ளவர் துணையால் சென்று பார்க்கலாம்.

இக்கோவில் கல்வெட்டுப்படி இவ்வூர் ஒரு பிரம்மதேயமாக இருந்துள்ளது. இக்கோவில் கூடலூர் நாட்டின் கீழ் வருகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் தொன்மையானதாக இராஜகேசரிவர்மனின் 4 ம் ஆண்டு கல்வெட்டு (வடபுறச்சுவரிலுள்ள சாசனம்)  கிடைத்துள்ளது. இவரை கண்டராதித்தன் என அடையாளம் கண்டுள்ளனர். இவரது அதிகாரியான மஹிமாலய இருக்குவேள் என்னும் பராந்தக வீரசோழன் என்பவர் இக்கல்வெட்டில் காணப்படுகிறார். சிதைந்த இக்கல்வெட்டின் மூலம் அவர் உவச்சர்களுக்கும் ஸ்ரீபலி கொட்டுவோர்க்கும் நிலம் தானமாய் கொடுத்ததை அறியமுடிகிறது.

கண்டராதித்தரது ஏழாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இராசசிங்கன் உத்தமசீலனான மும்முடிச்சோழ இருக்குவேள் என்பவர் இக்கோவில் இறைவனுக்கு தேவதானமாக நலம் கொடுக்கிறார்.

அதன் பின் முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகள்  கிடைக்கின்றன. இவரது ஐந்தாம் ஆண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கிறது. அக்காலத்தில் இவ்வூர் கேராளந்தக வளநாட்டின் கீழ் வருகிறது. கோவிலின் வடபுற சுவர் ராஜராஜர் கல்வெட்டு ஒன்று  கீழ்வேங்கை நாட்டை சேர்ந்த புலியூரைச் சேர்ந்த கிழவன்  வைத்த நுந்தாவிளக்கு தானம் மற்றும் அவ்விளக்கு எரிய நெய்தானத்திற்கு கொடுத்த காசுகள் பற்றிய குறிப்புள்ளது.

இராஜராஜரது 22ம் ஆண்டு கல்வெட்டு(வடபுற சுவர்)
இறைவனுக்கு திருவமுதம் செய்ய கொடுத்த நிலதானத்தையும், இவ்வமுது நாநாழி அளவு இருக்கவும் இந்நிலங்கள் காச்சுவன் புல்லி ஆநந்தனுக்கும்,  புல்லி கூத்தனுக்கும், கீமுத்தனுக்கும், பாரதாயன நக்கன் வளவன் ஒற்றி என்பவர்ளுக்கும் கொடுத்து இதனை கல்வெட்டில் வெட்டியுள்ளனர்.

ராஜராஜரது 26 ம் ஆண்டு கல்வெட்டு(தென்புற சுவர்) இறைவனுக்கு பாண்டியகுலாசனி வளநாட்டு பெருவாயினாட்டு செட்டன் மாடலன் நக்கநாராயணன் நந்தா விளக்கு தானமளிக்கிறார். மேலும் இக்கல்வெட்டுக்கு அருகே இவரது சிதைந்த 26 ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டுள்ளன.

ராஜேந்திரசோழரின் மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் கேரளாந்தக வளநாடு ராஜராஜவளநாடு என மாற்றம் அடைகிறது.

இரண்டாம் இராஜேந்திரரின் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

கோவிலின் கருவறை எண்கோண அமைப்பிலுள்ளது.. விமானம் தற்சமயம் இல்லை. கோவில் கட்டிய காலத்தில் இது நிச்சயம் மகோன்னதமாய் விளங்கியிருக்கும். சிகரத்திலுள்ள யாளி வரிகள் தொல்லியல்துறையால் சீரமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மா, விஷ்ணு, தவ்வை சிற்பங்கள் கோவிலின் முன் நிறுத்திவைக்க பட்டுள்ளன.

0 comments:

Post a Comment