Monday, September 17, 2018

கல்வெட்டின் நிலையறிதல் -15

 
முதலாம் ராஜராஜ சோழரை அவரது மெய்கீர்த்தி இன்றி குறிக்கும் கல்வெட்டுகள் சாலைகலமறுத்த கோவிராஜகேசரி என்றே முதன்மைபடுத்துகின்றது என்பதை நாமறிவோம். அவ்வளவு சிறப்புமிக்க போரினைப்பற்றிய தகவல்கள் கிடைக்காதது நமக்கு ஒரு வியப்பான விடயமே ! இன்றுநாம் காணவிருக்கும் கல்வெட்டுச்செய்தி ராஜராஜரையும் மதிரைகொண்ட  ராஜராஜதேவர் எனக்கூறும் கல்வெட்டு செய்தியாகும்.
மதிரைகொண்டகொப்பரகேசரி என்று முதலாம் பராந்தகரும், 
மதிரைகொண்டராஜகேஸரி என்று சுந்தரசோழரும் மதுரையை வென்றதன் பொருட்டு தமக்கு பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அதே போன்று
ராஜராஜசோழனும் மதுரையை வென்றதனை குறிக்கும் விதமாக மதிரை கொண்ட இராஜராஜதேவர் எனப் பட்டம் சூட்டிக் கொண்டார். இச்செய்தியை  அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியமறை எனும் பகுதியில் வீற்றிருக்கும் காளி கோயிலில் தனியே வைக்கப்பட்டிருக்கும் நிலைத் தூண் கல்வெட்டு தாங்கிநிற்கிறது. ராஜேந்திரசிங்கவளநாட்டில் மிறைக்கூற்றதில் உள்ள உஞ்சேனைமாகாளமுடைய பட்டராகிக்கு (உஜ்ஜைனிமாகாளிக்கு) மற்றும் உஞ்சேனைமாகாளமுடைய கூத்தர்க்கும் (நடராஜர் )க்கும் விளக்கு எரிக்க இன்றைய திரணி எனும் ஊரை (தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரிது)    எறிந்து நிறையாக கொண்டுவந்த 236 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளதை தெரிவிக்கும் இந்தக் கல்வெட்டு தற்போது புணரமைப்பில் இடம்பெயர்ந்து கோவிலின் டைல்ஸ் பூச்சுகளினுள்ளே புதையுண்டு கிடக்கிறது . கல்வெட்டின் நிலையும் கல்வெட்டுச்செய்தியும் படமாக இணைத்துள்ளோம். 

0 comments:

Post a Comment