Sunday, July 22, 2018

கல்வெட்டின் நிலையறிதல் - 13

பொன்னியின் செல்வன் :

கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அறியாத வாசகர் வட்டமும், வரலாற்று ஆர்வலர்களும் அரிது.
அந்நாவலில் ராஜராஜசோழன் அவரது  இயற்பெயரான அருமொழி தேவன் என்ற பெயரில் வருவார். மேலும் அவருக்கு அந்நாவலில் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அந்நாவல் ஒரு புதினம் என்றாலும். அதில் சுட்டப்பெறும் பொன்னியின் செல்வன் என்ற சிறப்புப் பெயர் மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது. ஆனால் அப்பெயர் அவரது கல்வெட்டுகளிலோ, செப்பேட்டிலோ எங்கும் குறிக்கப்படுவதில்லை. இவ்விஷயம் கல்கி அவர்களின் சுவைமிகு கற்பனை ஆகும்(?). ஆனால் இப்பெயருடன் தொடர்புடைய கல்வெட்டு ஒன்று திருவண்ணாமலை அருகே திருமலை என்ற ஊரிலுள்ளது. இவ்வூரிலே ராஜராஜரின் சகோதரி குந்தவை சமணர்களின் வழிபாட்டுக்காக அவரின் பெயரிலேயே ஏற்படுத்திக் கொடுத்த குந்தவை ஜீனாலயத்தில் தான் இவ்வரிய கல்வெட்டு உள்ளது. இக்கோவிலை பற்றி விரிவாய் பின்னொரு பதிவில் காண்போம்.

இனி இக்கல்வெட்டுச் சிறப்பினைக் காண்போம் :

இக்கல்வெட்டு அவரின் 21ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட பாடல் வடிவில் அமைந்த கல்வெட்டாகும். இதில் நந்தாவிளக்கு, சிற்பங்கள் அமைத்தவை குறித்த குறிப்புள்ளது. மேலும் கணிசேகரமரு பொற்சூரியன் என்பவர் இம்மலையின் இருபுறத்திலும் கலிங்கு அமைத்ததை கூறுகிறது. கல்வெட்டில் இம்மலை வைகைமலை என அழைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வரிகளை காண்போம் :

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடையசோழன்
அருண்மொழிக்கு யாண்டு யிருபத்தொன்றாவதென்றும்
கலைபுரியுமதி நிபுணன்   வெண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்நன் திருநாமத் தால்வாய்
நிலைநிற்கும் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரைசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர்வைகை கோவே

இக்கல்வெட்டில் பொன்னியாருடைய சோழனும் வருகிறது அருமொழி என்ற ராசராசரின் இயற்பெயருமுள்ளது.
யார் கண்டது?  இக்கல்வெட்டு கூட கல்கிக்கு பொன்னியின் செல்வன் என்று பெயரிட ஊன்றுகோலாய் இருந்திருக்கலாம். இக்கல்வெட்டு நன்னிலையிலுள்ளது.

0 comments:

Post a Comment