Friday, July 27, 2018

கல்வெட்டுக் கோயில்கள் - 2


திருக்கோடிக்காவல் கோவிலமைப்பு குறித்து சென்ற பதிவில் கண்டோம் இனி இக்கோவிலின் முக்கிய கல்வெட்டுச் செய்திகளைக் காண்போம்.

கல்வெட்டு 1:
கோயில் உண்ணாழிகைத் தென்புறச் சுவரிலுள்ள  பல்லவ மன்னன் நந்திவர்மரின் பத்தொன்பதாவது  ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.37 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
திருக்கோடிக்காவிலிருக்கும் சிறுநங்கை ஈஸ்வரம் எனும் கோவிலில் நுந்தா விளக்கெரிப்பதற்காக ஆழிற்சிறியன் என்பவன் மூலதனமாக வைத்த நூறு களம் நெல்லினை இக்கோயிலில் வழிபாடு நடத்தி வரும் ஆத்திரையன் நாராயணன் ஏறன் மற்றும் அவனது தம்பியர் மூவரும் பெற்றுக் கொண்டு அதில் வரும் வட்டியிலிருந்து விளக்கிற்கு உழக்கு நெய்யளிக்க ஏற்ற செய்தியை அறிகிறோம்.

கல்வெட்டு 2:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டானம், குமுதம், ஜெகதியில் உள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் இருபத்தியிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. (பழங்கல்வெட்டில் இருந்து படியெடுக்கப்பட்டது)
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மரின் மனைவி  வீரமகாதேவியார் ஹிரண்யகர்ப்பம் மற்றும் துலாபாரம் என்ற இரு வேள்விகளைச் செய்து அதிலிருந்து திருக்கோடிக்கா மகாதேவர்க்கு அளித்த 50 கழஞ்சு பொன்னில் 25 கழஞ்சில் வரும் வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழிகை அரிசியும் ஒரு பிடி நெய்யும் கொடுக்க வேண்டுமெனவும், நொந்தா விளக்கெரிக்க நாள்தோறும் உழக்கு நெய்யினை அளிக்க வேண்டுமெனவும் மேலும் இப்பணியை ஊர்ச் சபையார் நிறைவேற்றவும் பணிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

கல்வெட்டு 3:
கோயில் உண்ணாழிகை மேற்குப்புற அதிட்டானத்தில் உள்ள முற்கால பாண்டியரான கோமாறஞ்சடையனின் நான்காம் ஆண்டு கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை :  (ARE.21 of 1930-31)
கல்வெட்டுச் செய்தி:
இக்கோவில் இறைவனுக்கு நந்தாவிளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூர் அரையன் கள்வன் என்பவர் பதினைஞ்சு கழஞ்சு பொன்னளித்துள்ளார்.
இதற்கு வட்டியாக பிழையாநாழி என்ற நாழியின் அளவுப்படி உழக்கு நெய்யினை, திருக்கோடிக்கா நாராணக்க சதுர்வேதிமங்கல சபையார் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கல்வெட்டு 4:
கோயில் முன்மண்டபத்தில் தென்புறம் அதிட்டான ஜெகதியில் இளங்கோ முத்தரையரின் 13 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு.
கல்வெட்டு அறிக்கை : (ARE.38 of 1931)
கல்வெட்டுச் செய்தி:
இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. இம்முத்தரையரின் காலத்திலே நாட்டு மன்றாடிகள் 50 ஆடுகளும் வேறொருவர் 100 ஆடுகளும் இக்கோயிலிறைவனுக்கு விளக்கெரிக்க தானமாக அளித்த செய்தியைக் குறிக்கிறது.

0 comments:

Post a Comment