திருக்கோடிக்கா
தேவாரம் பாடப்பெற்ற காவிரி வடகரைத் தலங்களிலே 37 வது கோவிலாகிய திருக்கோடிக்காவானது மாயவரத்திலிருந்து கதிராமங்கலம் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் கல்வெட்டில் வடகரை பிரம்மதேயம் நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவாகிய கண்ணமங்கலம் என அழைக்கப்பட்டுள்ளது.
ஐந்துநிலை கோபுரம் கொண்ட அழகியத் திருக்கோவில். விமானம் திராவிட வகையினைச் சார்ந்தது. பிற்காலக் கட்டுமானத்தால் கோவில் தளம் உயர்த்தப்பட்டு அதிட்டானம் மறைந்துள்ளது. மேலும் கருவறையைச்சுற்றிய பிற்கால கட்டுமான சுவற்றால் அங்குள்ள அழகிய கோட்டச் சிற்பங்களை முழுமையாக ரசிக்க முடியாத நிலையுள்ளது.
கோவிலின் தென்புற சுவற்றில் காரைக்கால் அம்மையாருடன் மகளிர் ஒருவர் வணங்குவது போன்ற ஆடல்வல்லான் சிற்பமுள்ளது, தென்புறக் கோட்டத்தில் அழகிய ஆலமர் செல்வன் சிற்பம் அழகாக உள்ளது, பிற்காலச் சிலையின் ஆக்கிரமித்தல் காரணமாய் முன்னவர் மறைக்கப்பட்டுள்ளார்.
மேற்புறக் கோட்டத்தில் அடிமுடி காணா அண்ணல் சிற்பமும், வடபுறக் கருவறைக் கோட்டத்தில் நான்முகன் சிற்பமும், வடபுற அர்த்தமண்டபக் கோட்டத்தில் அரிகண்ட, நவகண்ட வீரருடன் கூடிய கொற்றவைச் சிற்பமும் அழகாய் செதுக்கப்பட்டுள்ளன.
திருச்சக்கரப்பள்ளியில் உள்ளவாறு அரசமகளிர் ஈசனை வணங்குவது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டு முழுமையடையாது உள்ளது. (இக்கோவிலில் செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக கல்வெட்டுள்ளது. இச்சிற்பம் அவராகவும் இருக்கலாம்?)
வேதிபத்ர உபபீடத்தில் சிவபுராணம், இராமயண காட்சிகள் குறுஞ்சிற்பங்களாய் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டிய மகளிர், குடக்கூத்துச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளை பொருத்தமட்டில் மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கவர்மன், பராந்தகர், உத்தமசோழர், இராஜராஜசோழன், இராஜேந்திரர், விக்ரமசோழன், குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜர், கோமாறஞ்சடையன், கோவிளங்கோ முத்தரையர், காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள் என இக்கோவிலில் மொத்தம் 48 கல்வெட்டுகள் உள்ளன. பல்லவர் காலம் தொடங்கி கோப்பெருஞ்சிங்கன் காலம் வரை இக்கோவில் மேன்மைபெற்று இருந்துள்ளது.
இக்கோவிலைப் பற்றியும், இறைவழிபாடு பற்றியும், நிலவிற்பனை, நிலவெல்லை பற்றியும் தெரிந்து கொள்ள இக்கோவிலின் கல்வெட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.
முதலாம் இராஜராஜர் காலத்தில் 'சூரியதேவர்' கோவிலொன்று இருந்தது தெரிய வருகிறது.
கல்வெட்டுகளில் சில பெயர்கள் தமிழ்ச்செறிவோடு காணப்படுகின்றன. உதாரணமாக 'பிழையாநாழி' என்றொரு அளவுக்கருவியும், 'புதுவாய்க்காலுக்கு நின்று போந்த உட்சிறுவாய்க்காலுக்கு கிழக்கு ' என்ற நில எல்லையும், 'தளி அர்ச்சிப்பான்' என்று கோவில் வழிபாடு செய்வோரும், 'தீப்போர்க்குச் செம்பொன்' என்ற தீயில் புடம்போட்ட தங்கமும் குறிப்பிடபடுவது கருத்தைக் கவருவதாக உள்ளது.
இவ்வூரில் முன்பிருந்த பழமையான கோவிலை மாற்றி கற்கோவிலாக அமையப்பெற்ற போது முன்பு அக்கோவிலில் காணப்பட்ட கல்வெட்டுகளையெல்லாம் மீண்டும் புதிதாக அக்கோவிலில் கல்லில் வெட்டியிருப்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பண்டைய மக்கள் கல்வெட்டுகளை முக்கிய ஆவணங்களாக போற்றி பாதுகாத்ததை இதன்மூலம் உணரமுடிகிறது.
சிறு சிறு பகுதிகளாக அக்கல்வெட்டு செய்திகளை இனி காண்போம்.
தொடரும்.......
0 comments:
Post a Comment